×

ஊடகம் மூலமாக யாரும் சொந்த கருத்து தெரிவிக்கக் கூடாது கட்டுப்பாடு இல்லாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்

சென்னை: “ தங்களுக்கு தோன்றும் எண்ணத்தை ஊடகம் மூலமாக யாரும் தெரிவிக்கக் கூடாது என்றும், கட்டுப்பாடின்றிச் செயல்படுபவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக அகற்றப்படுவார்கள்” என்றும் காங்கிரசாருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது சில நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டதல்ல. இந்தியாவின் இறையாண்மையைக் காக்க வேண்டும்; சாதி மத பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்; சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டதாகும். இந்தக் கூட்டணியைக் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் உயர்ந்த நோக்கத்தோடு அமைத்தார்கள்.

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கன் கலைவதாம் நட்பு” என்னும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, இந்தியாவின் பிரதம மந்திரி வேட்பாளராக தலைவர் ராகுல் காந்தியை, மு.க.ஸ்டாலின் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி முன்மொழிந்தார். இதன்மூலம் கோடிக்கணக்கான தேசிய தோழர்களின் இதயத்தில் மு.க.ஸ்டாலின் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். இந்த வரலாற்று புகழ் பெற்ற கூட்டணியைச் சிலர் சிறு ஆசைக்காகச் சிதைப்பது என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. தனி மனித லாப நஷ்டங்களையும் ஆசைகளையும் தவிர்த்து, சீறிய லட்சியத்திற்காக தியாகம் செய்திட வேண்டும் என்பது தான் தேசிய இயக்கத்தின் உயிர்மூச்சாகும். இன்றைய நிலையில், சாதியையும் மதத்தையும் சொல்லி மக்களின் அறியாமையை மூலக்கருவாகக் கொண்டு, மகாத்மா காந்தியின் இந்தியாவைச் சிதைத்துவிடலாம் என்று சில சக்திகள் நினைக்கிறார்கள்.

கூட்டணியைப் பற்றியோ, தேர்தல்களை பற்றியோ, கூட்டணிக் கட்சிகளோடு பேசுகிற அதிகாரம் காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே உண்டு,
மற்றவர்கள் அதுபற்றி பேசுதல் கூடாது.தங்களுக்கு தோன்றும் எண்ணங்களை நேரிலோ, கடிதம் மூலமோ காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவிக்கலாமே தவிர, ஊடகங்கள் மூலமாக எந்தச் செய்தியையும் யாரும் தெரிவிக்கக் கூடாது. அப்படி கட்டுப்பாடின்றிச் செயல்படுபவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து அகற்றப்படுவார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் முன்னோடி கே.என்.நேரு சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. திமுகவின் தலைமையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைக்கப்பட்டதென்பது, தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலினின் உதிரத்தால் கையெழுத்திட பெற்றதாகும். அதனை அழகிரி நினைத்தாலும் அல்லது நேரு நினைத்தாலும் பிரித்துவிட முடியாத உறுதியான கூட்டணியாகும். தமிழகத்தில் கடந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றியைப்போல தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற அனைவரும் இணைந்து செயல்படுவோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்து.

Tags : No one , No one should be allowed , own comments
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி