பெங்களூரு,: அரசியல் பிரமுகர்கள் பணம் கேட்டு மிரட்டியதால்தான் வெளிநாட்டிற்கு தப்பியோடினேன். உரிய பாதுகாப்பு அளித்தால் இந்தியா வருவதாக ஐ.எம்.ஏ உரிமையாளர் மன்சூர்கான் தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஐ.எம்.ஏ. நகைக்கடை உரிமையாளர் மன்சூர்கான் 42 ஆயிரத்திற்கு அதிகமானவர்களிடம் பல கோடி ரூபாய் பணம் வசூல் செய்து மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பினார். அவரை கைது செய்ய ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மன்சூர் கான் தனது நிறுவனத்தின் யூடியூப் வலைத்தளத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: அரசியல் பிரமுகர்கள் நெருக்கடியால் நிதி நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை. அவர்களின் தொடர் தொல்லை யால் வெளி நாட்டிற்கு தப்பினேன்.
ஏமாற்றவேண்டுமென்ற நோக்கம் எனக்கு இல்லை. இப்பொழுதும் அவர்களது பணத்தை திரும்ப கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் இந்தியா வந்தால் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒரு சிலர் என்னை கொலை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். தகுந்த பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்தியா வருகிறேன்’’ என்று கூறியுள்ளார். 18 நிமிடம் ஓடும் இந்த வீடியோ போலீசார் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து டி.சி.பி கிரீஷ் கூறியதாவது: மன்சூர்கான் ஒரு குற்றவாளியாக கருதப்படுபவர். அவரை கைது செய்ய ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்து சரணடைய முற்பட்டால் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.