ஈரோடு: தமிழகத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பிரச்னைகளை ஒருங்கிணைக்க 8 எம்.பி.க்கள் பங்கேற்கும் செயல்திட்ட கூட்டம் ஈரோட்டில் 29ம் தேதி நடக்க உள்ளது. ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் உயர் மின் கோபுரம் அமைத்தல், கெயில் எரிவாயு குழாய் பதித்தல், பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய் குழாய் பதித்தல், 8 வழிச்சாலை திட்டம் போன்றவைகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து தமிழ்நாடு உழவர்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை காங்கயம் ரோட்டில் உள்ள பசுவப்பட்டி பிரிவில் செயல் திட்ட கூட்டம் வரும் 29ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது.
இதில், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், பொள்ளாச்சி ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களான பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், ஆர்.ராசா, எஸ்.ஜோதிமணி, ஏ.கே.பி. சின்ராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன், கே.சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் பாசன பகுதி பிரச்னைகள் மற்றும் தமிழகத்தில் நிலவும் அனைத்துவித பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தப்படும். தமிழகத்தில் தற்போது வரை விவசாயிகள் பிரச்னைகளுக்காக தனித்தனியாக போராடி வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த கூட்டம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.