×

ரவுடி கொலையில் 6 பேர் கைது பழிக்கு பழியாக வெட்டி கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம்

திருவொற்றியூர்: எண்ணூரில் பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். பழிக்கு பழியாக ரவுடியை வெட்டி கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டியன் (32). பிரபல ரவுடி. இவர், கடந்த 10 ஆண்டுக்கு முன் நடந்த சின்ன பாளையத்தை சேர்ந்த யாதவ சங்க தலைவர் பாண்டியமணி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இவர் தனது வீட்டில் மனைவி காயத்ரியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், பாண்டியனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க முயன்ற காயத்ரியை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். பலத்த காயமடைந்த பாண்டியன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் (25), அருண்ராஜ் (20), மோகன் (20), பிரபாகரன் (19), சரண் (20), மோகன்ராஜ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டு திருவொற்றியூர் மாட்டு மந்தை தெருவை சேர்ந்த கேட் சுப்பிரமணி என்பவரை, ரவுடி பாண்டியன் வெட்டி கொலை செய்தார். சுப்பிரமணியின் உறவினர்களான நாங்கள் 6 பேரும் பாண்டியனை பழிக்கு பழியாக வெட்டிக்கொல்ல திட்டமிட்டோம். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் சுனாமி குடியிருப்பில் நடந்து சென்ற பாண்டியனை திடீரென வழிமறித்து அரிவாளால் வெட்டினோம். இதில் அவரது கையில் வெட்டு விழுந்தது. உஷாரான பாண்டியன் அங்கிருந்து தப்பினார். பின்னர், எங்களை வெட்டி கொல்ல பாண்டியன் நேரம் பார்த்து காத்திருந்தார். இதனால், நாங்கள் முந்திக்கொண்டு பாண்டியனை கொலை செய்தோம். இவ்வாறு போலீசார் கூறினர்.




Tags : murder ,Rowdy , 6 arrested ,Rowdy's ,murder,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...