பெரம்பூர்: துறைமுகம் கிழக்கு பகுதியில் தயாநிதி மாறன் எம்.பி., பொதுமக்களுக்கு இலவச குடங்களுடன் குடிநீர் வழங்கினார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஆனால், இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளும்கட்சியினர் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், திமுகவினர் டேங்கர் லாரி மூலம் குடிநீர் கொண்டு வந்து, பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் ்கிழக்கு பகுதி 60வது வட்டத்துக்கு உட்பட்ட ரேவ் பகுதி மக்கள் குடிநீரின்றி தவித்து வரும் தகவல் அறிந்து, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், நேற்று அந்த பகுதிக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் கொண்டு வந்தார்.
பின்னர், அங்கு ஏற்கனவே திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தொட்டி மூலம், பொதுமக்கள் 500 பேருக்கு குடிநீர் வழங்கினார். இதேபோல் பிராட்வே பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தயாநிதி மாறன் இலவச குடங்களுடன் குடிநீர் வழங்கினார். இதில், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ, பகுதி செயலாளர் ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் அபரஞ்சி, வட்ட செயலாளர் கவியரசன் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.