சென்னை: எடப்பாடி பழனிசாமியை திடீரென அண்ணன் என தங்க தமிழ்செல்வன் கூறி புகழ்வது புரியாத புதிராக உள்ளதாக அமமுக புகழேந்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என தங்கதமிழ்ச்செல்வன் சொன்னால், டிடிவி.தினகரன் யார். இதுபோன்ற பேச்சுக்கள் சரியா என்பதை தங்கதமிழ்செல்வன் யோசிக்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பில் தமிழக அரசு சாதனை செய்துள்ளதாக கூறுகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊரிலேயே பிளாஸ்டிக் உள்ளது. அரசோ, அரசை சார்ந்துள்ள மந்திரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பில் சாதனை செய்துள்ளதாக சொல்லாதபோது இவர் சொல்லவேண்டிய அவசியம் ஏன். இந்த அரசு எந்த சாதனையும் செய்யவில்லை என்பது தான் உண்மை. அதை மாற்றி ஏன் இந்த புகழாரம் என்று எங்களுக்கு தெரியவில்லை. இது புரியாத புதிராக உள்ளது.
எங்கள் தோல்வியை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அதிமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். சின்னம் சரியில்லை என்று அவர் கூறிய கருத்தை நானும் வரவேற்கிறேன். இதுபோன்ற கருத்துக்களை தலைமையிடம் தான் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாநிலங்கள் பல பிரச்னைகளுக்கு உள்ளாகும் போது அண்டை மாநிலங்களிடம் உதவி கோறுவது ஜனநாயக மரபு. கர்நாடக மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி செய்பவர்கள் மோடிக்கு வேண்டாதவர்கள். எனவே, முதலாளி மோடி கோபித்துக்கொள்வார் என்பதாலேயே அவர்களிடம் நேரடியாக சென்று தண்ணீர் கேட்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. தங்க தமிழ்செல்வன் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. நண்பர் என்ற முறையில் அவர் கூறியது வேதனை அளிக்கிறது. அவர் கூறும் கருத்துக்களை அதிமுக அமைச்சர்களே கிண்டல் செய்கிறார்கள். அதிமுகவுடன் இணைவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அதிமுகவுடன் சமரசம் செய்யும் திட்டம் இல்லை. இவ்வாறு கூறினார். எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என தங்கதமிழ்ச்செல்வன் சொன்னால், டிடிவி.தினகரன் யார்.