புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, ஏரி, குளங்கள் தூர்வாருவதற்கும், நகரம் தூய்மையாக இருப்பதற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். மேலும், `பசுமை புதுச்சேரி’ என்ற திட்டத்தின் கீழ் அனைத்து ஏரி, குளங்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வேல்ராம்பட்டு ஏரிக்கு சென்ற அவர், மரக்கன்று நட்டார்.
இதனை தொடர்ந்து, இன்று காலை கவர்னர் கிரண்பேடி, கனகன் ஏரிக்கு சென்று ஆய்வு செய்தார். இதற்காக அவர், ராஜ்நிவாசில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு வந்தார். அங்கு 2 வருடத்திற்கு முன்பு சாக்கடை மற்றும் மருத்துவக் கழிவு நீர் கலந்து அசுத்தமாக இருந்தது, தற்போது அது சரி செய்யப்பட்டு,
தெளிவான தண்ணீர் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். மேலும், ஏரியில் நீர்க்கோழி தண்ணீரில் மூழ்கி செல்வதை தனது செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தார். தொடர்ந்து அவர், ஏரிக்கரையோரம் மரக்கன்றுகளை நட்டார். இதில் கவர்னரின் கூடுதல் செயலர் சுந்தரேசன் மற்றும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். காலை 6.15 மணிக்கு வந்த கவர்னர், நிகழ்ச்சியை முடித்து விட்டு 8.45 மணிக்கு ராஜ்நிவாஸ் புறப்பட்டார்.