×

மத்திய பிரதேசத்தில் சாதி மாறிய திருமணத்தால் விபரீதம்: கர்ப்பிணி பெண் சுட்டுக் கொலை

* உடன் பிறந்த சகோதரர்களே பழி தீர்த்த கொடூரம்
* ஆணவக் கொலை வழக்காக பதிந்து விசாரணை

இந்தூர்: ;மத்திய பிரதேசத்தில் சாதி மாறி திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணி பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது சகோதரர்களே சுட்டுக் கொன்று பழி தீர்த்ததால், அவர்கள் மீது ஆணவக் கொலை வழக்கு பதிந்து, அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் அடுத்த ராவாத் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுல் (21). இவர், அதேபகுதியைச் சேர்ந்த குல்தீப் ராஜாவாத் (22) என்பவரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், காதலர்கள் இருவரும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர்கள், நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு திரும்பினர்.

தனது 7 மாத கர்ப்பிணியான மனைவி பாபுலை, தன்னுடைய வீட்டிற்கு குல்தீப் ராஜாவாத் அழைத்து சென்றார். பின்னர் பாபுலின் வீட்டிற்கு சென்றனர். திருமணமாகி முதன்முறையாக வீட்டுக்கு தம்பதியர் வந்ததால், பாபுலின் பெற்றோர் அவர்களை வரவேற்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த பாபுலின் 17 வயது சகோதரன், தனது கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சகோதரி பாபுலை நோக்கிச் சுட்டான். துப்பாக்கி குண்டு பாபுலின் தலையில் பாய்ந்ததால், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோரும், பாபுலின் கணவர் குல்தீப் ராஜாவாத்தும் செய்வதறியாது கூச்சலிட்டனர். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த பாபுலை மீட்டு ஆம்புலன்சில் இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாபுலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக பீட்மா போலீசார் வழக்குப்பதிந்து,

துப்பாக்கியால் சகோதரியை சுட்ட 17 வயது சகோதரன் மற்றும் 18 வயதுடைய மற்றொரு சகோதரனை தேடி வந்தனர். அவர்கள் நேற்று மாலை போலீசில் சரணடைந்தனர். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, சப் டிவிஷனல் எஸ்டிஓபி போலீஸ் அதிகாரி ராம்குமார் கூறுைகயில், ‘‘சாதி மாறி திருமணம் செய்து கொண்ட குல்தீப் - பாபுல் இருவரும், சனிக்கிழமை ஊருக்கு வந்தனர். அப்போதே, ஊருக்குள் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பாபுல் தனது வீட்டிற்கு கணவருடன் சென்ற போது, அவரது சகோதரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆணவக் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட 2 சகோதரர்களும் கைது செய்யப்பட்டனர்’’ என்றார். கர்ப்பிணி மனைவியை இழந்த கணவன் குல்தீப் ராஜாவாத் கூறுகையில், ‘‘பாபுலும் நானும் 8 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டோம். பாபுலின் சகோதரர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, என்னை மிரட்டி வந்தனர். தற்போது அவர்கள் வீட்டிற்கு சென்ற போது, என் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டனர்’’ என்று கண்ணீர் மல்க கூறினார். மத்திய பிரதேசத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஆணவக் கொலையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் ஆணவக் கொலை
* உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் கடந்த சில தினங்களுக்கு முன், சாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதலர்கள், அவர்களது கிராமத்தில் உள்ள வேம்பு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கும், திருமணத்திற்கும் இருதரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்கொலை செய்து கொண்ட காதலன் பெயர் விமேஷ், அவரது காதலி பெயர் ஆர்த்தி. போலீசார் இருதரப்பு பெற்றோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
* அதேபோல், ரேபரேலி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன், காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட ெபண்ணை, அவரது பெற்ேறாரே சுட்டுக் கொன்றனர். கடந்த 2018 ஏப்ரல் மாதம் வெளியூரில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த அவர்கள், தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். சம்பந்தப்பட்ட பெண் தன் கணவருடன், தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற போது இந்த சம்பவம் நடந்தது. இதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மோகினி, அவரது கணவரது பெயர் ராம்.


Tags : Madhya Pradesh , Madhya Pradesh, caste, marriage, pregnant woman, shot dead
× RELATED மகா காளேஸ்வரர் கோவிலில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து