கோவை: கோவை வஉசி மைதானத்தில் ஜம்போ சர்க்கஸ் நேற்று துவங்கியது. இதை வீடியோ ஸ்பெக்ட்ரம் செல்வராஜ் துவக்கி வைத்தார். சர்க்கஸ் மேலாளர் ரமேஷ், சுபா சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். இதில் எத்தியோபியா, ஆப்பிரிக்கா, தான்சானியா உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 150 கலைஞர்கள் சாகசங்கள் செய்தனர். சர்க்கஸில் குழந்தைகளை கவரும் ஜோக்கர்கள், ஜிம்னாஸ்டிக், பார் விளையாட்டு, பூமி உருண்டையில் உடம்பை வில்லாக வளைக்கும் வீராங்கனை, மண்ணெண்ணெய் மூலம் தீப்பந்த சாகசம், முன்பின் ஓட்டும் சைக்கிள் உள்ளிட்ட பல புதுவிதமான விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளது.
இரும்பு வளைத்திற்குள் பைக் சாகசம், கயிற்றில் எவ்வித பிடியுமின்றி முன்னும் பின்னும் நடப்பது, அந்தரத்தில் தொங்கியபடி ஊஞ்சல் விளையாட்டு உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஒட்டகம், குதிரை, நாய், கிளிகளை கொண்டு சுவராயஸ்யமான விளையாட்டுகளும் இடம்பெற்றன. சர்க்கஸ் தினசரி பகல் ஒரு மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என மூன்று காட்சிகள் நடக்கிறது. நுழைவு கட்டணமாக ரூ.100, ரூ.200, ரூ.300, ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவும் உண்டு.