பெரம்பூர்: துறைமுகம் மேற்கு பகுதியில், பொதுமக்களுக்கு இலவச குடங்கள் வழங்கி அவர்களுக்கு தயாநிதி மாறன் எம்பி குடிநீர் விநியோகம் செய்தார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. குடிநீர் பிரச்னைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுங்கட்சியினர் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபோல் சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் மேற்கு பகுதி 60வது வட்டத்துக்கு உட்பட்ட ரேவ் பகுதி மக்கள் குடிநீர்
கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு, இலவச குடங்களுடன் ஏற்கனவே திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டி மூலம் மேற்கண்ட பகுதி மக்கள் 500 பேருக்கு குடிநீர்
வழங்கினார். இதுபோல் பிராட்வே பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தயாநிதி மாறன் இலவச குடங்களுடன் குடிநீர் வழங்கினார். இதில், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் பாபு, பகுதி செயலாளர் ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் அபரஞ்சி, வட்ட செயலாளர் கவியரசன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.