கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகுவிமரிசையாக நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். தென் தமிழகத்தின் எல்லோரா என்றும், தென்பழநி கோயில் என்றும் அழைக்கப்படும் பிரசித்திப் பெற்ற குடவறை கோயிலான கழுகாசலமூர்த்தி கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகுவிமரிசையாக நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 6 மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடந்தன.
காலை 9 மணிக்கு மேல் கும்பங்கள் வைத்து ஹோமமும், சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து விமான கோபுர கலசங்களுக்கு பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு இடையே புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பிரதோஷ குழு தலைவர் முருகன், பவுர்ணமி, கிரிவல குழு தலைவர் மாரியப்பன் மற்றும் பக்தர்கள் என திரளாோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும், தலைமை எழுத்தர் பரமசிவம், செண்பகராஜ், மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.