×

தண்ணீர் இல்லை என்று சொல்லி பள்ளியை மூடினால் அங்கீகாரம் ரத்து: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: தண்ணீர் இல்லை என்று சொல்லி பள்ளியை மூடினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், தனியார் பள்ளிகளை கண்காணிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் விதிகள், 1974 மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் விதிகள் தொகுப்பு, 1978 நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான விதிகள், மழலையர் பள்ளிகளுக்கான விதிகள் அடிப்படையில் பள்ளியை தொடங்க/ தற்காலிகமாக அங்கீகாரம்/ நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

அங்கீகாரம் பெறும் பள்ளிகள் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதை பள்ளிகளின் நிர்வாகங்கள் உறுதி செய்த நிலையில், நிபந்தனைகளுக்குட்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. சில தனியார் பள்ளிகள் தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. மாணவர்கள் நலன் பாதிக்கும் வகையில் விதிகளுக்கு முரணாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.குடிநீர் தட்டுப்பாடு உள்ள பள்ளிகள் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து பள்ளிகள் செயல்படுவதற்கான நடவடிக்கையை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு செயல்பட தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பற்றாக்குறையால் மூடாமல், தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதை கண்காணிக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : school ,schools ,School education , No water, no school, no private school, no school
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளி...