சென்னை: தி.நகர் ராமானுஜம் நகரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தேவசேனாதிபதி நேற்று முன்தினம் இரவு தனியார் பேருந்து மூலம் மதுரையிலிருந்து சென்னை வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும், தனது பைகளை திறந்து பார்த்தபாது அதில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் மாயமானது தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
* சென்னை அண்ணாநகர் 5வது பிரதான சாலையில் பூமிநாதன் என்பவர் கிங் மேக்கர் என்ற பெயரில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இந்நிறுவன லாக்கரில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் மாயமானது. இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* அமைந்தகரையில் தனியார் நிறுவன உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்த சூளைமேடு அப்துல்லா தெருவை சேர்ந்த நந்தகுமார் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* சேத்துப்பட்டு ஷெனாய்நகர் கந்தன் தெருவை சேர்ந்த செல்வராஜ் (35) என்பவரின் தாய் உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார். இதனால், மனமுடைந்த செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
* நொச்சிக்குப்பம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பைக்குகள் தீப்பற்றி எரிந்து நாசமாகின. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.