நெல்லை: நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே செயற்கைகோள்களில் இருந்து வரும் தகவல்களை பெறும் பரிமாற்ற மையம் அமைந்துள்ளது. ரூ.14 கோடியில் அமைக்கப்பட்ட இந்த விண்வெளி தகவல்களை பரிமாறிக் கொள்ளும் மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் நேற்று திறந்து வைத்தார். இந்த மையத்தின் மூலம் தென்மாநில பகுதிகளில் பயணிக்கும் நீர்மூழ்கி கப்பல்கள், ரேடார் மூலம் தகவல்கள் பெறப்பட்டு பரிமாறிக் கொள்ளப்படும். அதே வளாகத்தில் மேலும் ஒரு தகவல் பரிமாற்ற மையம் அமைக்கும் பணிக்கும், இஸ்ரோ தலைவர் சிவன் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
ககன்யான் விண்கலத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விண்கலம் 400 கி.மீ. வட்டப் பாதையில் பூமியை சுற்றி வரும். பிரதமர் அறிவித்தபடி 2022 ஆக.15க்குள் இந்த விண்கலத்தை அனுப்ப வேண்டும். எனினும் இந்த பணிகளை முடித்து 2021 டிசம்பரில் விண்ணுக்கு அனுப்புவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.