புதுடெல்லி: மத்திய நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து டெல்லியில் பிரபல நிதித்துறை நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட், ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், மத்திய நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து டெல்லியில் பிரபல நிதித்துறை நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை நடத்தினார். ’பொருளாதார கொள்கையில் முன்னேற்றப் பாதை’ என்னும் தலைப்பில் நிதி ஆயோக் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட நிதித்துறை நிபுணர்கள் மற்றும் பிறதுறைகளை சேர்ந்த வல்லுனர்கள் பங்கேற்றனர். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர்களின் கருத்துகளை மோடி கேட்டறிந்தார். வேலைவாய்ப்பு, வேளாண்மை, நீர்வள மேலாண்மை, ஏற்றுமதி, கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக அந்த துறைகளை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளுக்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.