சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் ஆஷிக் என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். வழக்கமாக வாரத்திற்கு ஒருமுறை கடையின் முன்பு மற்றும் கடைக்குள் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஆஷிக் கடையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது, கடந்த 19ம் தேதி பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் கடையின் முன்பு தனது பைக்கை நிறுத்தினார். பிறகு கடையை சுற்றி சுற்றி வந்தார். அப்ேபாது கடையில் இருந்த ஊழியர்கள் உள்ளே வாடிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்த நேரத்தை பார்த்து, தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாணவர்கள் பாட புத்தகங்கள் கொண்டு செல்லும் பேக் ஒன்றை எடுத்துக்கொண்டு தனது பைக்கில் வைத்து விட்டு தப்பி செல்ல முயல்கிறார்.
அப்போது கடைக்கு வயதான மூதாட்டி ஒருவர் உதவி கேட்டு வருகிறார். இதை பார்த்த அந்த நபர், மூதாட்டிக்கு உதவி செய்வது போல் யாருக்கும் சந்தேகம் வராதபடி கடைக்குள் வரும் காட்சி பதிவாகி இருந்தது.இதையடுத்து பேன்சி ஸ்டோர் உரிமையாளர் ஆஷிக் சம்பவம் குறித்து வீடியோ பதிவுடன் எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வீடியோவில் பேக் திருடும் மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது சென்னை காவல் துறையில் பணியாற்றும் காவலர் என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேக் திருடும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.