×

விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் மகனை சேர்த்த லண்டன் தம்பதி: சொந்த ஊரில் குடியேற திட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நன்னாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் லண்டன் தம்பதியினர் தங்கள் மகனை சேர்த்து அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.  புதுச்சேரியைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ். பிஇ முடித்துவிட்டு சாப்ட்வேர் இன்ஜினியராக லண்டனில் வேலை செய்து வருகிறார். இவர் விழுப்புரம் அருகே காணையை சேர்ந்த சுபாஷினி என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் குடியேறியுள்ளனர். அங்கு சிவபிரகாஷ் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார். சுபாஷினி, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஹரீஷ் (5), அன்புச்செல்வன் (7) என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில், அன்புச்செல்வனை தங்கள் சொந்த ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் படிக்க வைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம், கமலா கண்ணப்பன் நகரில் உள்ள சுபாஷினி பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

நன்னாடு அரசுப்பள்ளியில் தங்களது மகனை 2ம் வகுப்பு சேர்த்துள்ளனர். தாத்தா வீட்டில் தங்கி படிக்கும் அன்புச்செல்வன் தினமும் 6 கி.மீ. தூரம் பள்ளிக்கு சென்று வருகிறான். இங்கிலாந்து குடியுரிமை பெற்ற தம்பதி தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்த சம்பவம் கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அன்புச்செல்வன் தாய் சுபாஷினியிடம் கேட்டபோது, `நானும், எனது கணவரும் ஆரம்பக்கல்வியை அரசுப்பள்ளியில்தான் படித்தோம். அங்குதான் ஒழுக்கம், நம்மை பக்குவப்படுத்திக்கொள்ளும் விதம் என அனைத்தையும் எதிர்காலத்தில் வளர்த்துக்கொள்ள முடியும்.  இன்று அரசுப்பள்ளியில் படித்து பெரிய சாப்ட்பேர் கம்பெனியில் எனது கணவர் வேலை செய்து வருகிறார். அதேபோல்தான் எனது மகனுக்கும் அரசுப்பள்ளி வாழ்க்கைமுறைதான் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்தோம். இதனால், நன்னாடு அரசுப்பள்ளியில் மகனை சேர்த்துள்ளோம்’ என்றார்.

Tags : London ,government school ,Villupuram , Villupuram, Government School
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...