×

பல்லாவரம் அருகே பர்னிச்சர் கம்பெனியில் தீ

பல்லாவரம்: பம்மல் பகுதியில் உள்ள பர்னிச்சர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. பம்மல் அண்ணா சாலையில் தனியாருக்கு சொந்தமான பர்னிச்சர் கம்பெனி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கம்பெனியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சுப் பொருட்கள் மீது எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது. ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. காற்றில் தீ மளமளவென பரவி கம்பெனி முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால், அங்கிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

தகவலறிந்து தாம்பரம், கிண்டி, ராஜ்பவன் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பர்னிச்சர் கம்பெனி முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு அவசரமாக கம்பெனியை விட்டு வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : furniture company ,Pallavaram , Fire, furniture company ,Pallavaram
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...