திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் ரூ.96 லட்சத்து 6 ஆயிரத்து 772 மற்றும் தங்கம், வெள்ளியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, அண்ணாமலையாரை தரிசனம் செய்கின்றனர். இதுதவிர, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத பவுர்ணமியொட்டி கடந்த 16ம் தேதி இரவு முதல் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் வந்தனர்.
இதனை தொடர்ந்து, பவுர்ணமி முடிந்து அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் நேற்று நடந்தது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இப்பணியில் 150 பேர் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் ரூ.96 லட்சத்து 6 ஆயிரத்து 772 ரொக்கப்பணம், 226 கிராம் தங்கம், 983 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.