×

தமிழகம் முழுவதும் 81 இடங்களில் 13 ஆயிரம் காவலர்கள் ரத்த தானம் வழங்கினர்

சென்னை: தமிழக காவல் துறை சார்பில் மாநிலம் முழுவதும் 81 இடங்களில் 13 அயிரத்து 868 காவலர்கள் ரத்த தான முகாமில் கலந்து காண்டு ரத்தம் வழங்கினர். சென்னையில் நடந்த ரத்த தான முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஜெயலலிதா கடந்த 2017ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது மாநிலம் முழுவதும் போலீசார் மத்தியில் கட்டாயமாக ரத்த தானம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு ரத்தம் பெறப்பட்டது. இதற்கு மாநிலம் முழுவதும் போலீசார் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதேபோல, கடந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் ரத்த தான முகாம் நடத்தப்பட்டு போலீசாரிடம் கட்டாயமாக ரத்தம் பெறப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ரத்த தான முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று டிஜிபி. டி.கே.ராஜேந்திரன் அறிவித்தார். அதற்கான கடிதத்தை ஆயுதப்படை ஏடிஜிபி சங்கர்ஜூவாலுக்கு அனுப்பி இருந்தார்.

பின்னர், தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் பணியாற்றும் 11 ஆயிரத்து 23 காவலர்களும் கண்டிப்பாக ரத்த தானம் வழங்க வேண்டும் என்று ஆயுதப்படை ஏடிஜிபி மாநிலம் முழுவதும் உள்ள உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை தொடர்ந்து இன்று மாநிலம் முழுவதும் 81 இடங்களில் 13 ஆயிரத்து 868 காவலர்கள் ரத்த தான முகாமில் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த ரத்த தான முகாமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி.டி.கே.ராஜேந்திரன், மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோல், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த ரத்த தான முகாமில் 1200 காவலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ரத்த தானம் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினர் அளிக்கும் ரத்தம் நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நோயாளிகளின் உறவினர்களிடம் ரத்தம் கேட்பதில்லை. கொடையாக பெறப்படும் ரத்தம் தான் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. காவலர்களிடம் இருந்த பெறப்படும் ரத்தம் பாதுகாக்கப்பட்டு தேவைப்படும் எழை எளிய மக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பெறப்பட்ட ரத்தம் முழுமையாக பயன்படுத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் இங்கு பெறப்படும் ரத்தம் முழுமையாக பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ரத்த தான முகாமில் பெறப்பட்ட ரத்தத்தை குப்பையை கொண்டு செல்வதுபோல அட்டைப் பெட்டியில் எடுத்துச் சென்றனர். ஏராளமான ரத்தம், கழிவறைகளில் கொட்டப்பட்டிருந்தது. எனவே இந்த ஆண்டு காவலர்களிடம் பெறப்படும் ரத்தத்தை, வீணாக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : guards ,locations ,Tamil Nadu , Blood donation, guards
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு