×

கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் மாற்றம்

சென்னை: கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தமிழக அரசின் எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு விரைவு பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்துகள் வடபழனி, அசோக்பில்லர், ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக இயக்கப்பட்டு வந்தன. மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு முதல் அனைத்து விரைவு பேருந்துகளும் மதுரவாயல் வழியாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மெட்ரோ மற்றும் மேம்பால பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதால் விரைவு பேருந்துகள் அனைத்தும் பழையபடி வடபழனி, தாம்பரம் வழியாக இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் கோயம்பேடு முதல் மீனம்பாக்கம் வரை நிறைவு பெற்றுள்ளது. மேலும், கோயம்பேடு மற்றும் பல்லாவரம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காகவும் வேண்டுகோளை ஏற்றும் அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 4.30 வரையிலும், இரவு 9.30 முதல் காலை 7 மணி வரையிலும் கோயம்பேடு, வடபழனி, அசோக்பில்லர், ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக இயக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இடங்களிலிருந்து பயணம் செல்வதற்கும் மற்றும் வந்தடைவதற்கும் இணைதளம் மூலமாக பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : bus stand , Koyambedu bus
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை