சென்னை: சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஈரோட்டைச் சேர்ந்த தேன்மொழி(25), எழும்பூர் பெண்கள் விடுதியில் தங்கியபடி சென்னை கீழ்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர்(27) என்பவர், தேன்மொழியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 14ம் தேதியன்று(வெள்ளிக்கிழமை) சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து விடுதி திரும்ப காத்திருந்த தேன்மொழியை, சுரேந்தர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், தேன்மொழியை சரமாரியாக வெட்டினார். இதில் தாடை, கை விரல்களில் காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.
இதனால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி ஓடினர். இதற்குள் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து சுரேந்தரும் தற்கொலைக்கு முயன்றார். இதில் சுரேந்தர் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தேன்மொழியும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுரேந்தரும் தொடர் சிகிச்சை பெற்ற வந்தனர். இந்த நிலையில், தலையில் பலத்த காயமடைந்த சுரேந்தர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, எழும்பூர் போலீசார் சுரேந்தரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்பு அவரது சடலமானது நாளை உறவினர்களிடம் வழங்கப்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது.