×

தவறான கேள்வி, பதில் குளறுபடி விவகாரம் குரூப் 1 தேர்வு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.கடந்த மார்ச் மாதம் நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்ட மாதிரி விடைத்தாளில்  18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது.இதையடுத்து, குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி விக்னேஷ் என்ற விண்ணப்பதாரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணையில் உள்ளது. முன்னதாக, தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான மதிப்பெண்களை தேர்வு எழுதியவர்களுக்கு  வழங்கப்பட்டு விட்டதாகவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கு நேற்று இறுதி விசாரணைக்கு  வந்தபோது, வழக்கு தொடர்ந்த விக்னேஷின் மதிப்பெண் பட்டியல் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.அதில், 31 பதவிக்கான இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல்  1550 பேர் பிரதான தேர்வுக்கு  அழைக்கப்படுவார்கள் என்றும் தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டும் மனுதாரர் இந்த தேர்ச்சி பெற்ற 1550 பேர்  பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி,  தேர்வு எழுதிய ஒருவர் தொடர்ந்த  வழக்கில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், இதனை பொதுநல வழக்காக கருதி ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க  முடியாது என்று கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.



Tags : Group 1 , Wrong question, answer ,Group 1 choice,judgment ,ICT
× RELATED குரூப்1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு...