சென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஏழுமலை என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பாக நடந்தது. அப்போது 3,171 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று நடிகர் சங்கம் சார்பில் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சங்கத்துக்கு முறையாக சந்தா செலுத்தாத 53 பேர் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கத்தை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீக்கப்பட்ட அனைவரும் போலியானவர்கள். தேர்தல் அறிவிப்பு முறையாகவே வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், போலியான உறுப்பினர்கள் என்றால் எப்படி கடந்த முறை தேர்தலில் வாக்களித்தனர். சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆவணங்களை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.அதன்படி சங்க உறுப்பினர்கள் நீக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை நடிகர் சங்கம் தாக்கல் செய்தது.அவற்றை ஆய்வு செய்த நீதிபதி, உறுப்பினர் நீக்கத்தை நடிகர் சங்கம் சரியாகத்தான் செய்துள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. தேர்தல் முடிந்ததும் அதன் முடிவுகளை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடரலாம் என்றார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமலயே நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றார். இதை கேட்ட நீதிபதி விசாரணையை 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.