ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் 40,000 தன்னார்வலர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச யோகா தினத்தையொட்டி ராஞ்சியில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது எங்களுக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறோம். இந்நிகழ்ச்சி வெற்றிகரமானதாக அமைய தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு ராஞ்சி வந்த பிரதமர் மோடி ராஜ்பவனில் தங்கியுள்ளார். இன்று காலை 6 மணிக்கு பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் நடைபெறும் சர்வதேச யோகா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். 40,000 தன்னார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் பங்கேற்கும் பொதுமக்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல வசதியாக நேற்று இரவு முதலே இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது.
இது தவிர 400 நகரும் கழிப்பறைகள், 200 குடிநீர் தொட்டிகள், 8 மருத்துவ குழுக்கள், 21 ஆம்புலன்ஸ்கள் 100 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன. இதயத்துக்கு யோகா’ என்பதே இந்த ஆண்டுக்கான யோகா தின கருத்து. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தையொட்டி ஐநா தலைமை செயலகத்தில் யோகா நிகழ்ச்சி தொடர்பான போஸ்டர்கள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.