* ரிட்டர்ன் தாக்கல் ஒத்துப்போகலே
* தீவிரமாக ஆய்வு செய்ய உத்தரவு
புதுடெல்லி: ஏற்றுமதியாளர்கள் ஜிஎஸ்டி ரீபண்ட் கோரி தாக்கல் செய்த விண்ணப்பங்களில் குறிப்பிட்ட வரவு செலவுகளும், வருமான வரி துறையில் தாக்கல் செய்த விவரங்களும் வேறுபடுகின்றன. இதனால், தீவிரமாக கண்காணிக்குமாறு ஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரீபண்ட்கள் வழங்கப்படுகின்றன.
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியத்திடம் (சிபிஐசி) அவர்கள் சமர்ப்பிக்கும் பில் மற்றும் ஆவணங்கள் மற்றும் வருமான வரித்துறையில் அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் தானாகவே வரி ரீபண்ட்கள் வழங்கப்படுகின்றன. 15 நாட்களில் இந்த ரீபண்ட் கிடைத்து விடும்.
ஆனால், சில ஏற்றுமதியாளர்கள் போலியான பில் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து ரீபண்ட் வாங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, அவர்களை கண்காணிக்க சிபிஐசி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்த அமைப்பு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘ஏற்றுமதியாளர்கள் சமர்ப்பிக்கும் ரீபண்ட் கோரிக்கைகளை அனுமதிக்கும் முன்பு அவற்றை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் பட்டியலை கண்டறிந்து அவை பற்றிய விவரங்களை சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.
இதன்மூலம் நூறு சதவீத கண்காணிப்பை உறுதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. ஆனால், இந்த கண்காணிப்பால் ரீபண்ட் பெறுவதில் காலதாமதம் ஏற்படும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட சுமார் 12 லட்சம் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் உள்ளனர். இவர்களில் 1.5 லட்சம் பேர் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் 3,500 ஏற்றுமதியாளர்களின் கணக்கு தாக்கல் விவரங்கள் தவறாக உள்ளது. அதாவது, வருமான வரித்துறையிலும், ஜிஎஸ்டி ரீபண்ட் கோரியும் தாக்கல் செய்ய விண்ணப்பங்களில் வரவு செலவு விவரங்கள் முரண்பாடாக உள்ளன. 3,500 ஏற்றுமதியாளர்கள் குறைந்த வருவாய் உள்ளதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால், ஏற்றுமதி வருவாயை அதிகமாக காட்டி ரீபண்ட் தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர, ஜிஎஸ்டி வரி செலுத்துவோரில் சுமார் 3 சதவீதம் பேர் தாக்கல் செய்த விவரங்கள் சரிவர இல்லை. எனவே இவர்கள் தாக்கல் செய்த விண்ணப்பங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். உரிய ஆய்வுக்கு பிறகே ரீபண்ட் அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில், இந்த நடைமுறையால் முறையாக கணக்கு காட்டி வரி செலுத்துவோர், ரீபண்ட் பெறுவோர் பாதிக்கப்படக் கூடாது என சிபிஐசி வலியுறுத்தியுள்ளது.