சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக அப்பல்லோ மருத்துவமனையில் பொது முழு உடல் பரிசோதனை செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால், ஓட்டல்கள், மேன்ஷன்கள், பள்ளிகள், மெட்ரோ ரயில் நிலைய கழிவறைகள், அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டு வருகிறது. இதையடுத்து, தமிழக அரசு தண்ணீர் பிரச்னையை சமாளிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், தமிழக அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாகவே செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்நிலையில், தண்ணீர் பிரச்னை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டரிடமும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், எதிர்பாராதவிதமாக நேற்று முன்தினம் இரவு இந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். தற்போது அவருக்கு தொண்டையிலும் பிரச்னை இருப்பது தெரியவந்தது. இதனால்தான் கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர், தேர்தல் பிரசாரத்தில்கூட பேச முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
இதையடுத்து, நேற்று காலை 7 மணிக்கு சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் அவரது உடலை பரிசோதனை செய்தனர். தொண்டை பகுதியில் என்டோஸ்கோபி கருவி மூலம் பரிசோதனை செய்து, ஏதாவது பிரச்னை உள்ளதா என்றும் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பரிசோதனை நேற்று காலை 10 மணி வரை நடந்தது. பின்னர் முதல்வர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு வந்தார். நேற்று முழுவதும் அவர் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால்தான் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார். இந்நிலையில், இன்று 2-வது நாளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்து வருகிறார். இன்றைய தினமும் முதல்வரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது.