சாம்பல்: உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வேன் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு மினி வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. நள்ளிரவில் ரெஹ்ரவன் கிராமம் அருகே, எதிர்திசையில் வந்த சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் 8 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேனில் பயணித்தவர்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.