×

முதல்வர் எடப்பாடி கடந்த வாரம் சென்று வந்த நிலையில் ஓபிஎஸ் இன்று டெல்லி பயணம்

சென்னை: முதல்வர் எடப்பாடி கடந்த வாரம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்துவிட்டு வந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்கிறார். அங்கு நாளை நடைபெறும் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை டெல்லி சென்றார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றாலும், தனியாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார்.

இதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி செல்கிறார். டெல்லியில் நாளை (21ம் தேதி) மதியம் 2 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே துணை முதல்வர் ஓபிஎஸ் டெல்லி செல்வதாக கூறப்படுகிறது. மத்திய பட்ஜெட் ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முன் அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். டெல்லி செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக, அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமையை நீக்கி விட்டு ஒற்றை தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது சம்பந்தமாக நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபகாலமாக எடப்பாடி - ஓபிஎஸ் இருவரும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட ஓபிஎஸ் கோவையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து நேற்று இரவுதான் சென்னை திரும்பினார். தொடர்ந்து, இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags : Delhi ,Edappadi ,OBS , Chief Minister Edappadi, OPS, Delhi journey
× RELATED வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட...