புதுடெல்லி: மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
பாஜக சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லா அறிவிப்பு
மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை பிடித்து மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து, இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருந்தது. பாஜ கூட்டணிக்கு அதிக பெரும்பான்மை இருப்பதால் ஆளும் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவது உறுதி.
எதிர்க்கட்சிகள் சார்பில் எந்த வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தனது கட்சியை சேர்ந்த எம்பி.யான ஓம் பிர்லாவை (57), சபாநாயகர் வேட்பாளராக பாஜ அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் கோடாப்பண்டி தொகுதியில் இருந்து எம்பி.யாக தேர்வானவர் இவர், மூன்று முறை எம்எல்ஏ.வாகவும், 2 முறை எம்பி.யாகவும் இருந்துள்ளார். பாஜ தலைவர் அமித் ஷாவிற்கு நெருக்கமானவர். கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய துணை தலைவராக இருக்கிறார்.
சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லாவுக்கு பல கட்சிகள் ஆதரவு
மக்களவை சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லாவின் பெயர் முன்மொழியப்பட்டதற்கு பிஜு ஜனதா தளம், சிவசேனா, அகாலி தளம், தேசிய மக்கள் கட்சி, மிசோ தேசிய முன்னணி, லோக் ஜனசக்தி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அதிமுக மற்றும் அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்றவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறவில்லை என்ற போதிலும், பாஜ வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல், காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும் ஓம் பிர்லாவிற்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். அதே நேரம், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை தெரிவிக்கவில்லை.
ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு
இந்நிலையில் மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் உள்பட 12 உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் வழிமொழிந்தனர். *ஓம் பிர்லாவை, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாரும் வழிமொழிந்தார்.பிரதமரும் மக்களவை காங்கிரஸ் தலைவர் சவுத்ரியும் திமுக குழு தலைவர் டிஆர்.பாலுவும் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர்த்தினர். ஓம் பிர்லா சபாநாயகராக அனைத்துக் கட்சி எம்பிக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்
இதையடுத்து புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். அப்போது ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகராக பெற்றதில் பெருமை கொள்வதாக அவர் தெரிவித்தார். ஓம் பிர்லா மக்களவையில் சிறந்த சபாநாயகராக விளங்குவார் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி கூறியதாவது, கோட்டா தொகுதியில் ஒருவர் கூட பசியுடன் உறங்க செல்லக்கூடாது என மக்களை மையமாக வைத்து அவருடைய அரசியல் செயல்பாடு இருந்தது;குஜராத் நிலநடுக்கத்தின் போது, ஓம் பிர்லா பாதிக்கப்பட்ட பகுதியில் தங்கி, கடுமையாக பணியாற்றியதை மறக்க முடியாது; கோட்டா தொகுதியில் கல்வி நிலையங்கள் நிறைந்தவையாக விளங்க ஓம் பிர்லாவே காரணம்; கோட்டா தொகுதியில் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர் ஓம் பிர்லா, என்று கூறினார்.