பிஜீங்: சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களில் 12 பேர் பலியானார்கள். 122 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் நகரில் நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.3 புள்ளிகளாக பதிவானது. இபின் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டு அரைமணி நேரம் கடந்த நிலையிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது.
செங்குடுவில் அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கருவி, நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னதாக ஒலி எழுப்பியது. பின்னர் ஒரு நிமிடங்கள் கழித்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 30 வினாடிகள் நீடித்ததாக தெரிகிறது. மெய்டாங்கில் ஓட்டல் ஒன்று நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. இதேபோல் இபின், ஜியூயாங் மாவட்டங்களை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 நெடுஞ்சாலைகளும் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 2 பேரில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும், 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். 122 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாகாணத்தில் 300 தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் சுரோகாவில் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது. இதையடுத்து, யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சுமார் 3 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் கரையை தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.