புதுடெல்லி: ‘எதிர்காலத்தில் தீவிரவாத தாக்குதல்களை தடுப்பதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. தெற்கு காஷ்மீரில் அனந்த்நாக்கில் நேற்று முன்தினம் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் உயிரிழந்தார். தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் ரோந்து வாகனம் அருகே தீவிரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசி தாக்கியதில் 2 பொதுமக்கள் மற்றும் வீரர்கள் 9 பேர் காயமடைந்தனர்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அனந்த்நாக் தீவிரவாத தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ மேஜர் கேதான் சர்மாவிற்கு மரியாதை செலுத்துகிறேன். புல்வாமாவில் ராணுவ வாகனம் மீது காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வீரர்களும், பொதுமக்களும் காயமடைந்தனர். மத்திய அரசும், உளவு துறை அமைப்புக்களும் எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரமான தீவிரவாத தாக்குதல்களை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.