சென்னை: அதிமுக ஆட்சியில் கடந்த 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடம் ரூ.95 லட்சத்தை வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது கணேஷ்குமார் என்பவர் கடந்த 2016ல் மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மற்றும் சகாயராஜ், பிரபு உள்ளிட்ட 4 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் முகாந்திரம் உள்ள நிலையில் நீதிமன்றத்தில் உள்ள விசாரணையை சந்திக்க மாட்டாரா? என கேள்வி எழுப்பினார். அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் மனுவை திரும்ப பெற அனுமதித்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.