×

தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை: டிஜிபி தகவல்: டிஜிபி தகவல்

திருமலை: தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை வழங்கப்படும் என டிஜிபி ரவிசங்கர் அய்யனார் தெரிவித்தார்.விஜயவாடாவில் ஆந்திர மாநில கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காவல் துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என முதல்வர் முடிவு செய்தார். இதற்காக டிஜிபி கவுதம் சவாங் உத்தரவின்படி அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டியின் மூலம் மொத்தம் 19 மாடல்  விடுமுறை முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள  யூனிட் அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை  தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். யூனிட் அதிகாரிகள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப சில நாட்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த வார விடுமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. காவல்துறையில் மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 300 காலிப்பணியிடங்கள் உள்ளது.

இதில் 20 சதவீத காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதுகுறித்து கமிட்டி   அறிக்கையில் விவாதிக்கப்பட்டது. விசாகப்பட்டினம், கடப்பா, பிரகாசம் மாவட்டத்தில் சோதனை முறையில் வார விடுமுறை அமல்படுத்தப்பட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் கருத்துக்களை பெற்றுக் கொண்டோம்.
ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கருத்து கேட்கப்படும். முக்கிய பிரமுகர்கள், மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில்  பணிபுரிபவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முடிந்தவரை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். தேவைப்படும் பட்சத்தில் காவல்துறை தலைமையகத்தில் உள்ள பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளப்படும். போலீசாருக்கு தொடர்  அழுத்தத்தால் திடீர் மாரடைப்பு, கிட்னி பாதிப்பு, சர்க்கரை வியாதி  போன்ற பல்வேறு பாதிப்புக்களை சந்திக்க வேண்டி உள்ளது. காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்கள் 10 முதல் 15 ஆண்டுகளில் உயிர் இழக்க  கூடிய நிலை ஏற்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில் கட்டாய ஓய்வில் சென்றவர்கள் மற்றும் தண்டனை வழங்கப்பட்டு சஸ்பெண்டில் உள்ளவர்களையும் பணியில் அமர்த்திக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Police ,Inspector ,AP , From,Chief Guard ,Inspector, Andhra Pradesh,Police
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது