மயிலாடுதுறை: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டி மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய தீர்த்த குளத்தில் கழுத்தளவு நீரில் நின்றபடி, வேதபாடசாலை மாணவர்கள் 9 பேர் 1 மணி நேரம் வருண ஜெபம் செய்தனர். காவிரி கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் வீசிய அன்று மழை பெய்தது. அதன்பிறகு குறிப்படத்தக்க அளவில் மழை பெய்யவில்லை. இதனால் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையில், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்றுவிட்டது.மேலும் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலை மாற வேண்டியும், பருவமழை தவறாது பெய்யவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்து காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வரவேண்டியும், மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் ருத்ரஹோமம், வருணஜெபம் ஆகியவை நேற்று நடைபெற்றது. தொடர்ந்து நாதஸ்வரத்தில் அமிர்தவர்ஷினி, ஆனந்த பைரவி ராகங்கள் வாசிக்கப்பட்டன. ஆலயதிருக்குளத்தில், கழுத்தளவு நீரில் நின்றபடி, சிவபுரம் வேதசிவாகம பாடசாலை மாணவர்கள் 9பேர் 1 மணிநேரம், வருண மந்திரங்களை ஜெபித்து, வருண ஜெபம் செய்தனர். தொடர்ந்து மழைபெய்வதற்கு உரிய திருப்புன்கூர் தேவாரப்பாடல்கள் பாடப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மழை பெய்யவேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.