×

வலையபட்டி அங்கன்வாடி மையத்திற்கு 10வது நாளாக குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு

திருமங்கலம்: வலையபட்டி அங்கன்வாடி மையத்திற்கு நேற்று 10வது நாளாக குழந்தைகளை பொதுமக்கள் அனுப்பாததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வலையபட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்திற்கு இதே ஊரினை சேர்ந்த ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த 2 பெண் ஊழியர்களை, பணியில் அமர்த்தியதை கண்டித்து மற்ற பிரிவை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர். நேற்று 10வது நாளாக அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப வலையபட்டி மக்கள் மறுத்து விட்டனர். ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த 2 குழந்தைகளுடன் நேற்று வலையபட்டி அங்கன்வாடி மையம் இயங்கியது. இந்த மையத்தில் மொத்தம் 20 குழந்தைகள் படிக்கின்றன. ஆனால் மற்ற சமுதாய குழந்தைகளை பொதுமக்கள் அனுப்ப மறுப்பதால் மையம் குறைந்த அளவு குழந்தைகளுடன் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று அங்கன்வாடி மையத்திற்கு வந்த 2 குழந்தைகளுக்கும் உணவு சமைக்கப்பட்டு பரிமாறும் பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராமபெண்கள் கூறுகையில், ‘‘கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு ஜல்லிக்கட்டு போட்டியில் பெரிய அளவில் வெடித்தது. இதனை தொடர்ந்து எங்கள் கிராமத்திலுள்ள கோயில் ஒன்றில் கிடா வெட்டி சாமி கும்பிட்டு விட்டோம். இதனால் எங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப முடியாது. தெய்வகுற்றமாகி விடும். அதே நேரத்தில் அதே சமுதாயத்தை சேர்ந்த வேறு கிராமத்தினை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கு வந்தால் நாங்கள் குழந்தைகளை அனுப்ப தயாராக உள்ளோம். பிரச்னை எங்களுக்கும், உள்ளூர் ஆதிதிராவிட மக்களுக்கும் தான். கிடா வெட்டியதால் உள்ளூரில் அவர்களுடன் ஒன்று இணைய முடியாது. எனவே தான் குழந்தைகளை அனுப்ப முடியாது என முடிவு எடுத்துள்ளோம்’’ என்றார்.

இருதரப்பு மோதல் தொடர்பாக கடந்த 10 நாட்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வலையபட்டியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கிராமத்தில் பெருவாரியான ஆண்கள் தலைமறைவாகி விட்டனர். பெண்கள், குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இதனால் கிராமமே வெறிச்சோடியது. கிராமம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரச்னை தொடர்பாக வலையபட்டியில் நேற்று திருமங்கலத்தில் ஆர்டிஓ முருகேசன் தலைமையில் அமைதி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாரிகள், போலீசார் மட்டுமே வந்திருந்தனர். கிராமத்தை சேர்ந்த இரண்டு தரப்பு மக்களும் ஆர்டிஓ பேச்சுவார்த்தைக்கு வராமல் புறக்கணித்தனர். இதனால் பேச்சுவார்த்தை துவங்கவில்லை.

Tags : Parents ,children ,Anganwadi Center , Anganwadi Center
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்