டெல்லி: தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக இன்று பணியை தொடங்கினேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பாஜ தலைமையிலான தே.ஜ கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களிலும், இதன் தலைமையிலான ஐ.மு. கூட்டணி மொத்தமாக 91 இடங்களிலும் வென்றன. இதர கட்சிகளும், கூட்டணிகளும் 98 இடங்களை பிடித்தன. காங்கிரசுக்கு மக்களவையின் மொத்த பலத்தில் 10 சதவீத இடங்கள் (55) கிடைக்காததால் இந்த முறையும் அதிகாரப்பூர்வமாக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாத நிலை உள்ளது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து, 57 மத்திய அமைச்சர்களுடன் கடந்த மாதம் 30ம் தேதி 2வது முறையாக பிரதமர் பதவியை நரேந்திர மோடி ஏற்றார்.
இந்த புதிய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் (17வது மக்களவை) இன்று தொடங்கியது. முன்னதாக மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜ.வை சேர்ந்த மூத்த எம்.பி வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்றார். இதனையடுத்து மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர்.
இதற்கிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி போட்டியிட்டார். முடிவில் அமேதி தொகுதி மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் ராகுல் காந்தி தோல்வியுற்றார். வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து இன்று நடைபெற்ற 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவை இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி-யாக ராகுல்காந்தி பதவியேற்றார்.
முன்னதாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார். அதில், தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக இன்று பணியை தொடங்கினேன் என்றும் எம்.பியாக இன்று பிற்பகல் பதவியேற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையான நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவனாக இருப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.