போடி : போடிமெட்டு அடுக்கு மலைச்சாலையில் அந்தரத்தில் தனியாக நிற்கும் பாறை பயத்துடன் ரசித்து கடக்கும் பயணிகள். தனுஷ்கொடி - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக, கேரளா இரு மாநிலங்களின் எல்லையை இணைக்கும் பகுதியாக போடி மெட்டு உள்ளது. இந்த சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இச்சாலையை 1961ம் ஆண்டு போடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த சுப்புராஜ் தலைமையில் அப்போதைய முதல்வர் காமராஜ் திறந்து வைத்தார்.
இந்த சாலையில் 8வது கொண்டை ஊசி வளைவிற்கு முன்பாக பாறை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால், இப்பகுதியைக் கடக்கிற அனைத்து ஓட்டுநர்களும் மற்றும் பயணிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். காற்று வீசும் போது அவ்வழியாக டூவீலர் மற்றும் சிறுவாகனங்களில் செல்பவர்கள் பாறை தங்கள் மீது விழுந்து விடுமோ என்று பயத்துடனே செல்கின்றனர். சுற்றுலா வருபவர்கள் ஒற்றையாய் அந்தத்தில் நிற்கும் இந்த பாறையை ரசித்து விட்டுச் செல்கின்றனர்.