×

திருப்பதி மலை பாதையில் சிறுத்தை தாக்கியதில் 2 பெண்களுக்கு காயம்: வாகன ஓட்டிகள் தனியாக செல்ல வேண்டாம்...தேவஸ்தானம் அறிவுரை

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லக்கூடிய இரண்டாவது மலைப் பாதையில் சிறுத்தை தாக்கியதில் தாய் மற்றும் மகள் காயம் அடைந்தனர். திருப்பதி மலையில் உள்ள பாலாஜி நகர் இரண்டாவது லைனில் வசிக்கும் பாவனி மற்றும் யாமினி, இருவரும் நேற்று இரவு தங்கள் உறவினருடன் திருப்பதியில் இருந்து திருமலைக்கு டூவிலரில் சென்று கொண்டிருந்தனர். திருப்பதி மலையை அடைய சுமார் இரண்டு கி.மீட்டர் இருந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை புலி திடீரென டூவிலர் மீது பாய்ந்து, அவர்களை தாக்க முயன்றது.

இதைப்பார்த்து சுதாரித்துக் கொண்ட உறவினர், டூவிலரை வேகமாக ஓட்டி சென்றுவிட்டார். இந்த சம்பவத்தில் பாவனி, யாமினி ஆகியோரின் கால்களில் சிறுத்தை புலி நகம் பட்டு கீறல் காயங்கள் ஏற்பட்டது. டூவிலரில் சென்றவர்கள் தப்பிச் சென்ற நிலையில், பின்னால் வந்து கொண்டிருந்த கார்கள் மீதும் அந்த சிறுத்தை தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் கார்களில் வந்தவர்கள் கார்களை வேகமாக ஓட்டி சென்றுவிட்டனர். தொடர்ந்து திருப்பதி மலையை அடைந்த யாமினி, பாவனி ஆகியோரை சிகிச்சைக்காக அங்குள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான அஸ்வினி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சிறுத்தை புலிகள் கொடூர தாக்குதலில் இருந்த அதிர்ஷ்டவசமாக இரு பெண்கள் உயிர்தப்பிய சம்பவம் திருப்பதிக்கு வரும் பக்தர்களிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருப்பதி-திருமலை இடையே பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்புக்காக மலைப்பாதையில் தேவஸ்தான நிர்வாகம், விஜிலென்ஸ் துறை ஊழியர்கள் உதவியுடன் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. மேலும், இரண்டாவது மலை பாதையில் வாகன ஓட்டிகள் தனியாக செல்ல வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : women ,leopard attack ,Tirupati , Tirupati mountain road, leopard, women, injury, motorists, devasthanam
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...