காரிமங்கலம்: காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்ததால், அதை தடுக்கும் நோக்கில், போலீசார் கிடா வெட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், போலீசார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. மாவட்டத்திலேயே காரிமங்கலத்தில்தான் குற்றச்செயல்கள் அதிகம் நடப்பதாக, பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று அதிகாலை கிடா வெட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், ஆட்டு ரத்தத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே 8 திசைகளிலும் தெளித்துள்ளனர். பின்னர், ஸ்டேஷனில் ஆட்டின் ரத்தக்கறை தெரியக்கூடாது என அவசரம், அவசரமாக தண்ணீரால் கழுவி விடப்பட்டுள்ளது. காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் துஷ்ட சக்திகள் அதிகமாகி விட்டதாகவும், இதனால் இரவு நேரங்களில் பணிபுரியும் போலீசாருக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இவ்வாறு செய்ததாக காவலர் ஒருவர் தெரிவித்தார்.