காத்மாண்ட்: நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் எவரெஸ்ட் சிகரத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேபாள தலைநகர், காத்மண்டில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் முறையாக எவரெஸ்ட் அடிவார முகாமில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அன்றாட வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் வகையிலும், நாடுகளிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வரும் வகையிலும் இந்த யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தியாங்போச்சே பகுதியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் ஏராளமான மக்களும், நேபாளத்துக்கான இந்திய தூதர் மஞ்சிவ் சிங் பூரி, உள்ளூர் மக்கள், மகளிர் மற்றும் இளைஞர் அமைப்பை சேர்ந்தவர்கள், சகர்மாதா தேசிய பூங்கா அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். கடல் மட்டத்தில் இருந்து 17,600 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் குஜராத்தை சேர்ந்த மலையேறும் வீரர் பாரத் சர்மா மற்றும் இதர மலையேறும் வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.