×

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி பெற இந்தியா முழுவதும் சிறப்பு வழிபாடு

லக்னோ : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வெற்றி பெறுதற்கு உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி வழிபாடுகளை நடத்தினர். நடப்பு உலக கோப்பை தொடரில் ரசிகர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்ப்பது இந்தியா - பாகிஸ்தான் மோதலைத் தான். பட்டம் வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவையும், அடுத்து நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தி அசத்தியது. அடுத்து நியூசிலாந்து அணியுடன் நடக்க இருந்த லீக் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டது. 5 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ள இந்திய அணி, தனது 4வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.00  மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்;

உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுடன் 6 முறை மோதியுள்ள இந்தியா அனைத்திலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த வெற்றி வரலாறும் இந்திய வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதே சமயம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்திய அணியை வீழ்த்தி இருப்பது பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. பந்துவீச்சில் முகமது ஆமிர், பேட்டிங்கில்  ஹபீஸ் சிறப்பான பார்மில் உள்ளனர். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

பிற்பகலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே 4 ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மிக முக்கியமான இந்த ஆட்டம் பிசுபிசுக்காமல் இருக்க வேண்டும் என்பதே  ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது. மழை விளையாடினால் விளம்பர வருவாயில் சுமார் ரூ.150 கோடி வரை இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியா முழுவதும் பல இடங்களில் இந்திய அணியின் வெற்றிக்காக கூட்டுப்பிரார்த்தனைகள் நடைபெற்றது.

திருப்பதியில் வழிபாடு;
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற திருப்பதியில் ரசிகர்கர் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்தியா வெற்றி பெற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் படியில் ரசிகர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

வாரணாசியில் வழிபாடு;
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற வாரணாசியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. உத்திரபிரதேசம் வாரணாசியில் கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடத்தினர்.

தமிழகத்தில் வழிபாடு;
தமிழகத்தில் தஞ்சாவூர், ஈரோடு, கோவை, வேலூர், காஞ்சிபுரம், திருச்சி ஆகிய 6 இடங்களில் ஆறடி உயரத்திற்கு அகண்ட அகர்பத்தியை ஏற்றி இந்திய அணியின் வெற்றிக்காக ஏற்கனவே வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Special Worship ,World Cup Cricket ,India ,Win Indian Team , World Cup Cricket, Indian Team, Special Worship
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!