×

விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பென்னாகரம்: விடுமுறை தினத்தையொட்டி, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சவாரி செய்தும் உற்சாகமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை முடிந்ததால், கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் கூட்டம் குறைந்தது. இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று தர்மபுரி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் ஆயில் மசாஜ் செய்து கொண்டு, அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

பின்னர், மீன் காட்சியகம், தொங்குபாலம், முதலை பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து பரிசலில் குடும்பத்தினருடன் உற்சாகமாக சவாரி செய்து, காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டதால், ஒகேனக்கல் நேற்று களை கட்டியது. இதனால், அங்குள்ள மசாஜ் தொழிலாளர்கள், மீன்பிடிப்பவர்கள், சமையல் செய்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். கூட்டம் அலைமோதியதால், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையிலான போலீசார், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

Tags : holiday season , Holidays, Honeymoon, Tourists
× RELATED தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு...