×

கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

மதுரை: கோவையை தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கையில் கடந்த 21.4.19ம் தேதியான ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடித்து 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது. இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. கடந்த 12ந்தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி மொபைல் போன்கள், 29 சிம்கார்டு, 10 பென் டிரைவ், 300 ஏர் கன் புல்லட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில் கோவையை சேர்ந்த 3 பேர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

அதன்பேரில் கடந்த 13-ம் தேதி கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான் (25), கோவை வின்சென்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன் (25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஷேக் சபியுல்லா (36), ஆகிய 3 பேரின் வீடுகளில் கோவை போலீசார் சோதனை நடத்தினர். இவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், கணினி ஹார்டு டிஸ்குகள், பென் டிரைவ், மெமரி கார்டுகள் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றிய கையேடுகள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து கோவை ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டுக்கு போலீசார் அழைத்து சென்று ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் 3 பேரையும் வருகிற 28-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில்  கோவையை தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கொச்சியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சதகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : NIA ,Madurai ,Coimbatore , Coimbatore, Madurai, NIA Officers, test
× RELATED நகை பறிமுதல் விவகாரம் கோவை போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும்