கொடைக்கானல்: வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. தூண் பாறை, குணா குகை, கிரின் வேலி வியூ, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், கோக்கர்ஸ், பிரையண்ட் பூங்கா வாக் என அனைத்து இடங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன.
ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் மகிழ்ந்தனர். மேலும் பகல் நேரத்தில் குறைவான வெயில் அடித்தும், சாரல் மழை பெய்தும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்வித்தது. சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஓட்டல், விடுதி, டாக்ஸி, கைடு என சுற்றுலா தொழில் புரிவோரும் மகிழ்ச்சியடைந்தனர். ஒரே நாளில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்ததால் கொடைக்கானல் நகரின் பல இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். எனவே விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் கூடுதல் போலீசாரை நியமித்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதுடன் பார்க்கிங் வசதிகளையும் அதிகரிக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.