ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் போன்ற இரண்டு இடங்களில் அம்மா குடிநீர் திட்ட மையம் உள்ளன. இங்கு காலை 7:30 மணி முதல் 11:30 வரையிலும், மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரையிலும் 2 குழாய்களில் குடிநீர் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், தில்லை கங்காநகர் அம்மா குடிநீர் மையத்தில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்குவதில்லை என கூறப்படுகிறது. மேலும், ஒரு குழாயில் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று குடிநீர் பிடிக்க வேண்டியுள்ளது. அதிலும் மின்தடை ஏற்பட்டால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி, இந்த மையத்தில் பணிபுரிபவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அதிகளவில் குடிநீர் வினியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் அம்மா குடிநீர் மையத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.