கோவை: கோவையில் 1998ல் நடத்தியதுபோல் மீண்டும் தொடர் குண்டுவெடிப்புக்கு
சதி திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் பிடிபட்டவர்களிடம் என்ஐஏ
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல்
21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் குண்டு
வெடித்து 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத
அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தமிழகத்தில்
தொடர்பில் இருந்தவர்கள் பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
இதுதொடர்பாக கொச்சியை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 12ம் தேதி
கோவையில் முகமது அசாருதீன்(32), சதாம் உசேன்(26), அக்ரம் ஜிந்தா(26),
அபுபக்கர் (29), இதயத்துல்லா(38), இப்ராஹீம் (28) ஆகியோரது வீடுகள்,
அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தி மொபைல் போன்கள், 29
சிம்கார்டு, 10 பென்டிரைவ், 300 ஏர் கன் புல்லட்டுகள் உள்ளிட்டவற்றை
கைப்பற்றினர்.பின்னர் ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து
சென்று விசாரித்தனர். 6 பேரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இளைஞர்களை
சேர்க்க மூளைச்சலவை செய்து, தமிழகம் மற்றும் கேரளாவில் சில இடங்களில்
தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் 6 பேருக்கும் முகமது அசாருதீன் தலைவராக
செயல்பட்டதும் தெரியவந்தது. இவர்களில், அசாருதீன் தனது முகநூலில் ஐஎஸ்ஐஎஸ்
அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இலங்கை
குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகவும், மனித வெடிகுண்டாகவும்
செயல்பட்ட ஜஹ்ரான் ஹாஷிம் என்பவருடன் பேஸ்புக் நண்பராக
இருந்துள்ளார்.இதையடுத்து, முகமது அசாருதீனை கைது செய்து, கொச்சி
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த 6 பேர் அளித்த
தகவலின்பேரில், கோவையில் உக்கடம் வின்சென்ட் சாலையை சேர்ந்த முகமதுஉசேன்,
ஷாஜகான், ஷேக் ஷபியுல்லா ஆகிய 3 பேரை கோவை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இவர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளையும், தீவிரவாத செயல்களையும்
இளைஞர்களிடம் சமூகவலைதளங்கள் மூலமாக பரப்பி வந்ததும், கடந்த 1998 பிப்ரவரி
14ம்தேதி பா.ஜ மூத்த தலைவர் அத்வானி தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்தபோது
9 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதுபோன்று, மீண்டும் ஒரு
சதிச்செயலை கோவையில் அரங்கேற்ற திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
Tags : bomb blast , Plan ,restart ,bombing,Goa , 1998,solid information from NIA investigation