×

வியாசர்பாடியில் நள்ளிரவில் தேடுதல் வேட்டைபிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக் கொலை

* பட்டாக்கத்தியால் தாக்கியதில் 4 போலீசார் படுகாயம்
* ரவுடிகள் பீதி
சென்னை: வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி  நள்ளிரவு தேடுதல் வேட்டையின் போது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.சென்னை வியாசர்பாடி, தேசிகானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வல்லரசு (20). பிரபல ரவுடி. இவர்மீது 2 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புளியந்தோப்பு, ஓட்டேரி, வியாசர்பாடி, எம்கேபி நகர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியன்று நடந்து சென்ற 6 பேரை வழிமறித்து, பட்டாக்கத்தியால் வெட்டி நகை, பணம் பறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகள் தொடர்பாக இவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வியாசர்பாடி, எம்எம்.கார்டன் பகுதியில் பொதுமக்களிடம் வல்லரசு கத்தியை காட்டி மிரட்டுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின்பேரில் தலைமை காவலர் பவுன்ராஜ், காவலர் ரமேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு அடிதடி தகராறில் ஈடுபட்டு பொதுமக்களை பட்டாக்கத்தியால் தாக்கிய வல்லரசுவை இருவரும் பிடிக்க முயற்சித்தனர். அப்போது தலைமை காவலர் பவுன்ராஜுக்கு தலையில் பலத்த வெட்டு விழுந்தது. இதையடுத்து காவலர் ரமேஷை துரத்தி சென்று வல்லரசு சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டான். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் மில்லர், புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் எஸ்ஐக்கள் பிரேம்குமார், தீபன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், படுகாயம் அடைந்த தலைமை காவலர் பவுன்ராஜ், காவலர் ரமேஷ் ஆகிய இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், மாதவரம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள லாரி யார்டு பகுதியில் ரவுடி வல்லரசு பதுங்கியிருப்பதாக நள்ளிரவு 2 மணியளவில் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தனிப்படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மற்றொரு ரவுடியான கதிர் என்பவருடன் வல்லரசு மது அருந்தி கொண்டிருந்தான். அங்கு போலீசார் வருவதை பார்த்ததும் கதிர் தப்பி ஓடிவிட்டான். போலீசாரை பார்த்து ஆத்திரமடைந்த ரவுடி வல்லரசு, தன்னிடம் இருந்த பட்டாக்கத்தியால் தனிப்படை போலீசாரை சரமாரியாக வெட்டியுள்ளான்.

இதில், எஸ்ஐக்கள் பிரேம்குமார் என்பவருக்கு இடது கையிலும், தீபனுக்கு வலது கையிலும் பலத்த வெட்டு விழுந்தது. மேலும் போலீசாரை தாக்கிவிட்டு வல்லரசு தப்ப முயற்சிக்கவே, இன்ஸ்பெக்டர்கள் மில்லர், ரவி ஆகியோர் ரவுடி வல்லரசுவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் வல்லரசுவின் மார்பில் 2 குண்டுகளும், காலில் ஒரு குண்டும் துளைத்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரவுடி வல்லரசு ரத்த வெள்ளத்தில் பலியானான்.பின்னர் படுகாயம் அடைந்த எஸ்ஐக்கள் பிரேம்குமார், தீபன் மற்றும் போலீசாரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு  ெசன்று, பலியான ரவுடி வல்லரசுவின் சடலத்தை மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய கதிர் மற்றும் கூட்டாளிகளை  வலைவீசி தேடி வருகின்றனர். ரவுடி வல்லரசுவை போலீசார் சுட்டு கொன்ற சம்பவம் வியாசர்பாடி மக்களிடையே பெரும்  அதிர்ச்சியையும், ரவுடிகளிடையே பெருத்த பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து 4 போலீசார் சிகிச்சை பெறும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ரவுடி வல்லரசுவின் வீடு மற்றும் வியாசர்பாடி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

வழக்கு தொடருவேன்
வல்லரசு சென்னை மாதவரம், சீத்தாபதி நகர் 19-வது தெருவில்  தந்தை சாமிக்கண்ணு, அம்மா கருப்பாயி, சகோதரர்கள் பாண்டியன் (28), அருள் (25), அக்கா தனலட்சுமி (21) ஆகியோருடன் வசித்து வந்தான். தந்தை சாமிக்கண்ணு  கூறியதாவது:  என் பையன் ரவுடியே இல்லை.  அவன் சின்ன சின்ன தவறுகள் செய்து  வந்தான். தற்போது திருந்தி  வியாசர்பாடியில் இருந்து வீடு மாறி மாதவரம்  பகுதியில் வசித்து வருகிறோம்.   கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தான்.  நேற்று முன்தினம் கூட வேலைக்குத்தான் சென்று வந்தான். யாரோ சொன்ன பேச்சை  கேட்டு போலீஸ்காரர்கள் என் பையனை அநியாயமாக சுட்டுக்கொன்னுட்டாங்க. இதற்கு  நீதி வேணும். கண்டிப்பாக வழக்குத் தொடருவேன் என்று கூறியுள்ளார்.

நீதிபதி ஆய்வு
வல்லரசு  கொல்லப்பட்டது குறித்து நீதிபதி சம்பவம் நடந்த இடத்தையும் அரசு  பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யும் இடத்தையும் நேரடியாக சென்று  ஆய்வு செய்தார்.

ஏரியாவில் நுழைந்தாலே அடிதடி
வியாசர்பாடியில் ரவுடி வல்லரசு எப்போதும் 3 அடி நீளமுள்ள பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிவானாம். இவன் ஏரியாவுக்குள் நுழைந்தாலே, அங்கு அடிதடி, வெட்டு, குத்து தகராறு நடைபெறுவது வழக்கம். வல்லரசு தனது கூட்டாளிகளான கதிர் உள்ளிட்ட ஒருசிலருடன் அடிக்கடி அடிதடி தகராறில் ஈடுபட்டு, போலீசார் பிடிக்க வருவதை அறிந்ததும் கூட்டாளிகளுடன் தப்பி ஓடிவிடுவானாம். இதேபோல், நேற்றுமுன்தினம் நள்ளிரவில் தன்னை தனிப்படை போலீசார் பிடிக்க முயற்சித்த ஆத்திரத்தில், தன்னிடம் இருந்த பட்டாக்கத்தியால் சரமாரியாக தாக்கியிருக்கிறான். இதையடுத்து போலீசாரின் உயிரை பாதுகாக்க, 2 இன்ஸ்பெக்டர்களும் துப்பாக்கியால் சுட்டு வல்லரசுவை பிடிக்க முயற்சித்துள்ளனர். எனினும், வல்லரசு துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகிவிட்டான் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கமிஷனர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரிப்பு

ரவுடி  வல்லரசு பட்டாக்கத்தியால் வெட்டியதில், வியாசர்பாடி காவல்நிலைய தலைமை  காவலர் பவுன்ராஜின் தலையில் பலத்த வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது.  படுகாயம் அடைந்த பவுன்ராஜை முதலில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு சேர்த்தனர்.பின்னர் அவரை நேற்று காலை 11 மணியளவில்  ஆயிரம்விளக்கு பகுதியில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று  வருகிறார். மற்ற 3 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர். சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்,  கூடுதல் ஆணையர்  தினகரன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று போலீசாரிடம் நலம்  விசாரித்து அவர்களுக்கு அளிக்கப்படும்  சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

Tags : Vyasarpadi , Thirty-one, first thousand students, JEE exam shot dead, Only Tamilnadu students
× RELATED செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது...