×

21 குண்டுகள் முழங்க திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் அடக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி (69). இவர் கடந்த ஓராண்டாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் ராதாமணி உயிரிழந்தார். மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே கலிஞ்சிக்குப்பத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு நேற்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், எம்எல்ஏக்கள் பொன்முடி, மஸ்தான், உதயசூரியன், சீத்தாபதி சொக்கலிங்கம், வசந்தம் கார்த்திகேயன், எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கவுதமசிகாமணி, தமிழக அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம், கலெக்டர் சுப்ரமணியன், எஸ்பி ஜெயக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : MLA ,DMK ,Radhamani , 21 bombs,kneeling, DMK MLA,Radhamani,buried
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா