சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்துக்குள் அணுக்கழிவுகள் சேமிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அ.ம.மு.க நிர்வாகி வெற்றிவேல், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிடடோர் கலந்துகொண்டனர். அப்போது திருமாவளவன் கூறுகையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை தற்காலிகமாக ஒரு இடத்தில் சேமித்து வைக்கும் நடவடிக்கைகளை அணுசக்தி கழகம் மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக ஜூலை 10 ஆம் தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. அணுக்கழிவுகளை அணுஉலை வளாகத்துக்குள் சேமித்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும்.
எனவே இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஜூன் 25 ஆம் தேதி நெல்லையில் அனைத்து கட்சியினரும், சுற்றுச்சூழல் பாதுகாவலர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் ” என்று தெரிவித்தார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், ‘‘கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகள் சேமிக்கும் திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று கைவிட வேண்டும்” என்றார்.